Jul 30, 2017

ஆடிப்பெருக்கு (03.08.2017)

Image result for ஆடி பெருக்கு

தட்சிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணிகளைத் துவங்குவர். ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு. நாடு செழிக்கத் தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர். அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடினர். இந்த விழா இப்போதும் காவிரிக்கரை மாவட்டங்களில் சிறப்பாக நடக்கிறது. இந்நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம். ஆடி18ல் காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமணத்தம்பதிகள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர். ஆடிப்பெருக்கன்று, வீட்டில் கொடிவகைகளான அவரை, பீர்க்கு, புடலை போன்ற பயிர்க்குழி போடுவதும் உண்டு. நகை, பொருட்கள் வாங்கவும் நல்லநாள்.

தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் நிரம்பி காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடி 18-ல் பதினெட்டாம் பெருக்கு விழா, நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள காவிரி, பெண்ணை, பொருணை ஆகிய மூன்று நதிகளிலும் ஆடிப் பதினெட்டு கொண்டாடுவதை, மூவாறு பதினெட்டு எனக் குறிப்பிடுவார்கள்.

வீட்டிலேயே செய்யலாம் ஆடிப்பெருக்கு பூஜை: 

காவிரிக்கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை. ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு போடவேண்டும். நிறைகுடத்திலிருந்து அந்த செம்பில் நீர் எடுத்ததும், மஞ்சள் கரைந்துவிடும். திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின் முன் வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து, முன்னொரு காலத்தில் எங்களை மூதாதையர் உங்களை புனிதமாகக் கருதி வழிபட்டதுபோல் எங்களுக்கும் அத்தகைய மனநிலையைத் தாருங்கள் என்று வேண்டுங்கள். காவிரியையும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

காவேரிக்கு பெருமாள் தரும் சீர்வரிசை: 
Related image
ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கும் பெருமாள், ஆடிப்பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும், அன்று மாலை புடவை, திருமாங்கல்யம், வெற்றிலைபாக்கு, பழங்கள் முதலிய சீர் வரிசைகளை யானையின் மேல் ஏற்றி ஸ்ரீரங்கம் கோயிலிருந்து அம்மா மண்டபம் படித்துறைக்குக் கொண்டு வருவார்கள். பெருமாள் முன் அந்தச் சீர்வரிசைகளை வைத்து ஆராதனைகள் செய்த பின் அவற்றை காவிரிக்கு சமர்ப்பிப்பார்கள். காவிரிக்கு பெருமாள் சீர்வரிசை அளிக்கும் இக்காட்சியைக் கண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

காவிரியில் ராமன்: 
ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். வசிஷ்டர், அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, தட்சிண கங்கை என்று பெயர். அந்நதியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும் என்று கூறினார். அதன்படி ராமச் சந்திரன் காவிரியில் நீராடிய நாள் ஆடிப்பெருக்கு என்று ஒரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

மங்களச் சரடு: 
Related image
தென்னிந்தியாவில் திரிவேணி எனப்படும் பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோயிலின் நடை ஆடிப்பதினெட்டு அன்று அதிகாலையில் திறக்கப்படும். மக்கள் கூடுதுறையில் நீராடிவிட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும் ஆண்கள் வலதுகை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.

Image result for ஆடி பெருக்கு

அந்த நாளில், நதிக்கரை மற்றும் கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு உண்பதும் மரபாக இருந்து வந்துள்ளது. புதிதாக திருமணமான புதுமணத் தம்பதிகள் நதிக்கரையில் நிலாச் சோறு சாப்பிடுவார்கள். அன்றைய தினம் தாலி மாற்றிப் புதுத் தாலி அணிவதும் வழக்கம். திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணமாக வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். பிள்ளையார் பிடித்து காதோலை,, கருகுமணி, வெற்றிலை பாக்கு , பழம், சரடு, 18 வகை சித்திரான்னங்கள் படைத்து ஆற்றில் விட வேண்டும். 


ஆடி வளர்பிறை துவாதசியில் துளசி பூஜை (04.04.2017)


Image result for ஆடி துளசி பூஜை

ஆடி வளர்பிறை துவாதசியில் துளசி பூஜை செய்வதால் பல நற்பலன்களைப் பெறலாம். துளசி மாடம் முன் கோலமிட்டு, மாடத்திற்குப் பொட்டிட்டு, துளசிக்கு மாலையிட்டுப் பூஜிக்க வேண்டும். 
துளசி மாடம் இல்லாதவர்கள் 12 அல்லது 16 செங்கற்களால் துளசி பீடம் அமைத்து, அதன் முன்பு பெரிய அகலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அடுத்து பீடத்தின் நடுவில் துளசிச் செடியை வைத்து, சுற்றிலும் 12 என்ற எண்ணிக்கையில் சந்தன குங்குமப் பொட்டுகள் வைக்க வேண்டும். தொடர்ந்து அவை ஒவ்வொன்றின் மீதும் மலர்கள் வைத்து கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ஷ்ருஷிகேசா, பத்மநாபா, தாமோதரா என்று சொல்லி, மனதார வணங்கவும். அத்துடன், ஸ்வாகதம் என்றும் 3 முறை கூறவும்.
இனி, வெற்றிலையின் மீது சந்தனப் பிள்ளையார் பிடித்து வையுங்கள். அவருக்கு குங்குமத் திலகமிட்டு செம்மலரால் அர்ச்சனை செய்து வணங்க வேண்டும்.அடுத்து, தேங்காய் பழம், தாம்பூலம், பால் பாயாசம் நிவேதனத்துக்கு வைத்துக்கொண்டு பூஜையைத் துவக்குங்கள்.
ஓம் ஸ்ரீ விஷ்வக்சேனாய நம:- என்று மூன்று முறை சொல்லி விநாயகருக்கு துளசி தீர்த்தம் விடவேண்டும். தொடர்ந்து… ஓம் கஜானனாய நம: என்று துவங்கி விநாயகர் திருநாமங்கள் சொல்லி துதித்து, பழம் நிவேதித்து ஆரத்தி செய்யவும்.அடுத்ததாக, அன்றைய நாள் குறிப்புடன் சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். பின்னர், கணவன்-மனைவி இருவருமே துளசி பீடத்துக்கு (துளசி மாடம் இருந்தால் அதன் முன்பு) முன்பாக அமர்ந்து, கீழ்க்காணும் நாமாவளிகளைக் கூறி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஓம் ஸ்ரீம் பிருந்தா தேவ்யை நம:ஓம் விஸ்வ பூஜிதாயை நம:ஓம் விஷ்ணுப்ரியாயை நம:ஓம் தேவ மூலிகாயை நம:ஓம் கிருஷ்ண ப்ரியாயை நம:ஓம் சவுபாக்ய நிலயாயை நம:ஓம் விஷ்ணு கேசின்யை நம:ஓம் புஷ்பசாராயை நம:
ஓம் நந்தவன நாயகாயை நம:ஓம் விஸ்வ பாவணாயை நம:ஓம் யாக பூஜிதாயை நம:ஓம் தான ப்ரதாயின்யை நம:ஓம் மகாலக்ஷ்மி வாசாயை நம:ஓம் சகல மாட கலாலங்கார்யை நம:ஓம் ஸ்ரீராமப்ரியாயை நம:ஸ்ரீ துளசீ தேவ்யை நமோ நம:
அர்ச்சனை முடிந்ததும் தூப தீப நிவேதனம் செய்து, கையில் மலர் எடுத்து மூன்றுமுறை தன்னையே சற்றிக்கொண்டு கீழ்க்காணும் துதியை மூன்று முறை சொல்லுங்கள்.
ஓம் ப்ருந்தா ப்ருந்தாவனீவிஸ்வ பூஜிதா 
விஸ்வபாவனீ புஸ்பஸாரா நந்தனீச 
துளசீ க்ருஷ்ண ஜீவனீ ஏகாந்தாமாஷ்டகம் 
சைவ ஸ்தோத்ரம்நாமார்த்த ஸம்யுதம் 
ய:படேத் தாம்ஸ ஸம்பூஜ்ய 
அஸ்வ மேத பலம் லபேத்!
இப்போது மலர்களை அர்ப்பணித்துவிட்டு, மீண்டும் கைகளில் மலர் எடுத்துக்கொண்டு, மனதில் உங்களுடைய வேண்டுதல்களை நினைத்தபடி ஒரு நிமிடம் தியானித்து,
ப்ரசீத துளசி தேவி ப்ரசீத ஹரிவல்லபே !
க்ஷீரோத மதநோத்பூதே துளசி த்வாம் நமாம்யஹம் !!
என்றபடி துளசிச்செடியின் மேல் மலர்களை போட்டு ஆரத்தி செய்ய வேண்டும்.
ஓம் ஸ்ரீத்ரிபுராயை வித்மஹே துளசி பத்ராய தீமஹிதந்நோ துளசீ ப்ரசோதயாத் !
யந்மூலே சர்வதீர்த்தாநீ யந்மத்யே சர்வதேவதாயதக்ரே !
சர்வ வேதாஸ்ச துளசீம் தாம் நமாம்யஹம் !!
கற்பூர நீராஜனம் சமர்ப்பயாமி என்று சொல்லி நமஸ்கரித்து, பிரசாதம் எடுத்துக்கொள்ளலாம்.
பெண்கள் அர்ச்சனை குங்குமத்தை திருமாங்கல்த்திலும், நெற்றி வகிட்டிலும் இட்டுக்கொள்ளலாம்.
மேலும், குடும்பத்தோடு சேர்ந்து துளசி ஆராதனை துதிப் பாடலைப் பாடி வழிபடுவதால், மேலான பலன்கள் கைகூடும். சர்வ மங்கலங்களும் ஸித்திக்கும்.

வரலட்சுமி நோன்பு (04.08.2017) - விரத பூஜை முறைகளுடன்

அகில உலகெலாம் காக்கும் அன்னையான ஸ்ரீமஹாலக்ஷ்மி, வேண்டும் வரங்களைத் தரும் வரலக்ஷ்மியாக, நம் இல்லங்கள் தோறும் அருள் மழை பொழிய, தானே உகந்து வருகை புரிந்து வரம் பல தரும் நன்னாளே 'வரலக்ஷ்மி விரதமாகக் கொண்டாடப்படுகிறது.

செல்வத்தின் அம்சமாக இருந்து, நம் பாவ, புண்ணியத்திற்கேற்பவும், விதிப்பலனுக்கேற்பவும் செல்வத்தை வழங்கும் அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமே வரலட்சுமி விரதம் ஆகும்.

பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம். இதனால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். திருமணதோஷம் உள்ள கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். செல்வம், தான்யம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி போன்ற செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும்.

வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள், லட்சுமியை பூஜிக்கும் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிப்பது நல்லது. இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பர்.

ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் அனைவராலும் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை, தமிழகத்தில் சில குறிப்பிட்ட குடும்பங்களில் மட்டுமே கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்தப் பண்டிகையின் அழகியலையும், அதில் பொதிந்திருக்கும் தத்துவார்த்தங்களையும் உணர்ந்ததால், மெல்ல, மெல்ல, தமிழகத்திலும் இந்தப் பண்டிகை கொண்டாடும் வழக்கம் பரவி வருகிறது.

எத்தனை ஏழ்மையிலும் தன்னால் முடிந்த வரை பக்தியுடன் இப்பூஜை செய்பவர்களுக்கு அவள் நிச்சயம் அருள் பொழிவாள் - அப்போது கஷ்டப்பட்டாலும், தர்மத்துக்கே இறுதியில் வெற்றி என்பது போல, நிச்சயம் வருங்காலம் வளமானதாக இருக்கும். இது பணத்தினால் வரும் கஷ்டமாக இருந்தாலும் சரி, வேறு எந்த காரணமாக இருந்தாலும் சரி, அவள் கைவிடுவதேயில்லை. நடுவில் கடந்து போகும் காலங்களும் எப்படியோ அதிக கஷ்டம் தெரியாமல் போய்விடும்.

ஒவ்வொரு வருடமும், ஆடி அல்லது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளியன்று இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

வரலக்ஷ்மி விரதம் பண்டிகை எப்போது வரும் என்று தெரிந்து கொள்ள எளிமையான வழி - பெரும் மகானான முத்துஸ்வாமி தீக்ஷிதர் சொல்லி விட்டுப்போன வழி.

ஸ்ரீ ராகக் கீர்த்தனையான ”ஸ்ரீவரலக்ஷ்மி நமஸ்துப்யம்” மிக அற்புதமான கீர்த்தனை. அதில் தான் தெளிவாகச் சொல்கிறார்.

”ஸ்ராவண பெளர்ணமி பூர்வஸ்த்த சுக்ர வாரே” என்று. ஸ்ராவண (ஆவணி) மாதத்து பெளர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக் கிழமைக்கு உரியவளே என்று பொருள்.

”வரலக்ஷ்மி, ராவே மாயிண்டிகி” என்ற தெலுங்குப் பாடலும் புகழ்பெற்றது -.” வாத்சல்யமாக வாடி” என்றழைப்பது நெருக்கததை ஏற்படுத்துகிறது .

ஸ்ரீ மஹாலக்ஷ்மி வரலக்ஷ்மியாக, நமக்கு வரங்களை அள்ளி வழங்க இப்பூவுலகுக்கு வரும் நன்னாளில், அன்னையை நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளச் செய்து, நியமமுடன் பூஜித்து, பக்தியுடன், அம்பிகையைப் போற்றும் துதிகளைச் சொல்லி மனமுருக வணங்கினால், நாம் கேட்கும் வரங்கள் மட்டுமல்லாது, நம் அனைவருக்கும் அன்னையாகிய அந்த ஜகன்மாதா, இகபர சுகங்களையெல்லாம் வழங்குவது திண்ணம்.

வரலக்ஷ்மி விரதம் மூன்று நாட்கள் பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். சிலர் இரண்டு நாட்களாகவும் கொண்டாடுகிறார்கள்.

எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.

கொஞ்சம் சாஸ்திரோக்தமாக விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.

விரத கதை

தேவலோகத்தில் சித்திரநேமி என்ற பெண் வசித்து வந்தாள். இவள், தேவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நீதிபதியாக இருந்தவள். ஒருசமயம் அவள் தீர்ப்பு சொல்லும்போது, பாரபட்சமாக நடந்து கொண்டாள். நீதி வழங்குபவர்கள் எந்த சூழ்நிலையி<லும் நடுநிலை தவறக்கூடாது. ஆனால், சித்திரநேமி தன் பணியில் இருந்து தவறி விட்டாள். எனவே, பார்வதிதேவி அவளுக்கு குஷ்டநோய் ஏற்படும்படி சபித்து விட்டாள். சித்திரநேமி சாப விமோசனம் கேட்டாள்.

வரலட்சுமி விரதம் இருந்து தன்னை வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்றாள். அதன்படி சித்தரநேமி, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கி, நோய் நீங்கப்பெற்றாள். 

பணியிலோ, குடும்ப விவகாரத்திலோ நடுநிலை தவறி, அதனால் மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு வரலட்சுமி விரதம் அனுஷ்டிப்பது மனபாரத்தை குறைக்கும் மருந்தாக இருக்கும். வரலட்சுமி விரதத்தன்று, புண்ணய நதிகளில் நீராடுவது, ஒரு வருடம் தொடர்ந்து வரலட்சுமி விரதம் இருப்பதற்கு ஒப்பான பலன்களைத் தரும். கங்கை, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய நதிகளில் அன்று நீராடினால் செல்வச்செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. புகுந்த வீட்டு உறவினர்களை மதித்து நடக்கும் பெண்கள், வரலட்சுமி விரதம் இருந்த பலன்களை பெறுவதாக ஐதீகம். 

மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண்ணை அவளது பெற்றோர் மண முடித்துக் கொடுத்தனர். புகுந்த வீட்டில் கணவன், மாமனார், மாமியார், உறவினர்கள் என அனைவரையும், அவள் சொந்தமாக பார்க்காமல், கடவுளின் வடிவமாகவே பாவித்து, பணிவிடை செய்தாள். இதனால், அவள் வரலட்சுமி விரதம் இருந்த பலனை பெற்றாள். தன் கணவனுடன் நீண்ட காலம் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள்.

விரதத்திற்கு முன் தினம் தயார் செய்து கொள்ள வேண்டியவை:

1.பூஜை செய்யும் இடத்தில், கிழக்குப் பார்த்தாற்போன்ற சுவரில் அம்மன் படம் வரைய வேண்டும். வரலக்ஷ்மி என்பது கஜலக்ஷ்மிதான். ஆகவே, அம்மன் படம் கஜலக்ஷ்மி படமாக இருப்பது நல்லது. படம், பொதுவாக, மாவிலையுடன் கூடிய கலசத்தை வரைந்து நடுவில் அம்மன் முகம், சுற்றிலும் தோரணங்களுடன் மண்டபம், கலசத்தின் அருகில், விளக்கு, கண்ணாடி, சீப்பு, மஞ்சள் கிழங்கு, குங்குமச் சிமிழ், மைக்கூடு, அம்மானை, கழக்கோடி எல்லாம் இருப்பதாக வரைவது சம்பிரதாயம். சிறியதாக இன்னொரு படம், வாசற்படிக்கருகில், அம்மனை அழைக்கும் இடத்திலும் வரைவது வழக்கம்.

தற்போது வரலக்ஷ்மி அம்மன் படங்களை வாங்கி ஒட்டி விடுகிறார்கள்.

2. வீட்டு வழக்கப்படி, முகம் வைத்தோ, செம்பில் முகம் வரைந்தோ, அல்லது மஞ்சள் பூசிய தேங்காயில் முகம் வரைந்தோ பூஜிக்கலாம்.


கலசத்திற்குத் தேவையான பொருட்கள்:

  • பித்தளை, தாமிர, அல்லது வெள்ளிச் செம்பு/குடம்.
  • அம்மன் முகம்.
  • கலசத்திற்குக் கட்டும் பாவாடை அல்லது புடவை.
  • வீட்டு வழக்கப்படி, நீர் விட்டுக் கலசம் வைப்பதாயிருந்தால், அதில் சேர்க்க வேண்டிய, வாசனை கலசத் திரவிய பாக்கெட்.
  • அரிசிக் கலசமாயிருந்தால், அரிசி கால்படி, காதோலை கருமணி 2செட், வெற்றிலை, களிப்பாக்கு,இரண்டு மஞ்சள்கிழங்கு, ஒரு எலுமிச்சம்பழம், நாணயம். சிலர் உலர்பருப்பு, பழங்களையும் சேர்ப்பார்கள். அரிசியுடன் பாசிப்பருப்பு கலப்பதும் உண்டு.
  • மாவிலைக் கொத்து.
  • மஞ்சள் பூசிய தேங்காய்.
  • அம்மன் ஜடை மற்றும் அலங்கார சாமான்கள்.


பூஜை சாமான்கள்:

  • வாழை மரம், வாழை இலை.
  • அரிசி, நெல் (கலசத்தை வைப்பதற்கு).
  • மந்தஹாஸம் (இருந்தால்) அல்லது மண்டபம் போல் அமைக்கத் தேவையான பொருட்கள்.
  • மாக்கோல மாவு
  • தேங்காய், வெற்றிலை பாக்கு
  • பழங்கள்(வாழைப்பழம், மாதுளம் பழம்,விளாம்பழம், கொய்யா பழம், பேரிக்காய், (மேலும் சில வகைப்பழங்களையும் வாங்கலாம்)
  • தாம்பூலம் கொடுக்க கிஃப்ட் சாமான்கள், மங்கலப் பொருட்கள்.
  • பூக்கள்: தொடுத்த சரம், அம்பிகைக்குப்போடுவதற்குச் சிறிய மாலை, பூஜைக்கு உதிரிப்பூக்கள் முதலியவற்றை வாங்கிக் கொள்ளவும். தாழம்பூ அம்பிகைக்கு மிக உகந்தது. செண்பகப்பூ, தாமரைப்பூ, ஆகியவற்றை பூஜைக்குப் பயன்படுத்துவது சிறந்தது
  • நோன்புச் சரடு(அம்மனுக்கும் சேர்த்து ஒற்றைப்படையில் வாங்கவும்).
  • நைவேத்தியங்கள் செய்வதற்கான காய்,மற்றும் மளிகைப் பொருட்கள்.


பொதுவாக, தமிழகத்தில், தேங்காய் கொழுக்கட்டை, உளுந்து கொழுக்கட்டை, எள்ளுக்கொழுக்கட்டை, பருப்புக் கொழுக்கட்டை முதலிய நால்வகைக் கொழுக்கட்டைகள், வடை, பாயசம், பச்சரிசி இட்லி முதலியவை செய்வது  வழக்கம். அதற்கேற்றாற் போல், அரிசி மாவு, பூரணங்கள், பச்சரிசி இட்லிக்கு அரைப்பது போன்றவை முதல் நாளே செய்து கொள்ளலாம்.

தெலுங்கு, கன்னட வழக்கப்படி, போளி, பிசைந்த சாத வகைகள், சேமியா பாயசம் முதலியவை செய்கிறார்கள்.

·         கறுப்புக் கலக்காத ரவிக்கைத் துணி(அம்மனுக்குச் சாற்ற).சில வீடுகளில் புடவை எடுத்து சமர்ப்பிக்கிறார்கள்.

·         கஜ வஸ்திரம்(பஞ்சை தடிமனாகத் திரித்து, குங்குமத்தில் சிறிது நீர் தொட்டு, விரலால், நடுநடுவில் அழுத்தினால் வெண்பஞ்சு உருண்டைகளால் ஆன மாலை போல் வரும்(கீழுள்ள படத்தில் காட்டியது போல்).

முதல் நாள் செய்ய வேண்டிய வேலைகள்:

வீடு, பூஜை அறையை மெழுகி, ஸ்வாமிபடங்களைத் துடைத்துப் பொட்டு வைத்து, பூஜை சாமான்களைத் தேய்த்து, பஞ்சபாத்திர உத்தரிணி, தூபக்கால், தீபக்கால், பஞ்சமுக ஆரத்தி போன்றவற்றைத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

பூஜை செய்யும் இடத்தில், மந்தஹாஸம், அல்லது கழிகளை நட்டு, மேற்புறத்தில் ஒரு பட்டுத் துணியைப் போட்டு, பந்தலாகச் செய்து வாழைமரம் கட்டலாம். அல்லது ஒரு ஸ்டூல்/சிறிய மேசையைத் திருப்பிப் போட்டும் பந்தல் அலங்காரம் செய்யலாம்.

பந்தல் போட்டிருக்கும் இடத்தில் பெரிதாக மாக்கோலம் போட்டு காவி இடவேண்டும். ஒரு சின்ன பலகையிலும், அம்மனை அழைக்கும் இடத்திலும் சின்னதாகக் கோலம் போட வேண்டும். பூஜையறையிலும் போடவேண்டும்.

கலசம் தயாரித்தல்;

தாமிரச் செம்பாக இருந்தால், அதிலேயே முகம் வரையும் வழக்கம் இருந்தால், சுற்றிலும், சுண்ணாம்பைத் தடவிக் காய வைத்து, முகம் வரையலாம். இல்லாவிட்டால், செம்பில்/குடத்தில் சந்தனம் குங்குமம் இடவும்.

அம்மன் முகத்தை, நன்றாகத் துடைத்து, சந்தனம் குங்குமம் வைக்கவும். நகைகள் அதிகம் இல்லாத முகமாக இருந்தால், மென்மையாகத் தேய்த்து சுத்தம் செய்து, பின் விபூதியை மென்மையான துணியால் தொட்டுக் கொண்டு முகத்தைச் சுத்தம் செய்ய, பளிச்சிடும். கண்களுக்கு மை இட்டு திருஷ்டிப் பொட்டு வைக்கவும்.

கலசச் செம்பில்/குடத்தில், கலசச் சாமான்களைச் சேர்க்கவும்.

நீர்க்கலசமாயிருந்தால், செம்பு/குடத்தில் நீர் சேர்த்து, வாசனைக் கலச திரவியங்களை(பச்சைக்கற்பூரம், விளாமிச்சை வேர், ஜாதிக்காய், ஏலக்காய் முதலியன சேர்ப்பது வழக்கம். இப்போது இது சின்ன பாக்கெட்டுகளில் கிடைக்கிறது)சேர்க்கவேண்டும்

அரிசிக் கலசமாயிருந்தால், செம்பு/குடத்தில், முன்பு கூறிய அரிசி, வெற்றிலை முதலிய சாமான்களைச் சேர்க்கவும்.

அதன் மேல் மாவிலையை வைத்து, அதன் மேல் மஞ்சள் பூசிய தேங்காயை வைத்து, அதன் மேல் முகத்தை வைத்துக் கட்டவும். கலசம் வைக்கும் போது, மாவிலை ஒன்று தாழம்பூ மடல் ஒன்று என்று மாற்றி மாற்றி வைத்து அலங்கரிக்க அழகு மிளிரும்.

கலசத்திற்குப் பாவாடையைக் கட்டவும். சிலர் காதோலை கருமணியில் ஒரு செட் கலசத்திற்குள்ளும் மற்றொன்றை கலசத்தில் கழுத்தில் கட்டுவார்கள். ஜடை, பூச்சூட்டி அலங்கரிக்கவும். நகைகள் போட்டு வைக்கலாம்.

சிலர் அம்மனுக்கு தாழம்பூவால் ஜடை தைத்து அலங்கரிப்பார்கள். தாழம்பூ ஜடையில் கத்தி ஜடை, பெட்டி ஜடை என்று இருவகை இருக்கிறது. வெளிப்புறம் மடலின் நுனி வருமாறு தைப்பது கத்தி ஜடை. உட்புறம் மடக்கி வைத்துத் தைப்பது பெட்டி ஜடை. வாழை மட்டையில் பூக்களை வைத்தும் ஜடை தயாரிக்கலாம்.பூவால் பாவாடை தைத்து அணிவிக்கலாம்.
இப்போது விதவிதமான அலங்கார சாமான்கள் கிடைக்கின்றன. அவற்றை உபயோகித்தும் அலங்கரிக்கலாம். அலங்கரிக்கத் தெரியவில்லை என வருந்த‌ வேண்டாம். மனப்பூர்வமான பக்தி இருந்தால் போதும். அலங்காரம் தானாக அழகாக அமையும். எளிமையான அலங்காரத்தில் கூட அம்பிகையின் அழகு கொலுவிருக்கும்.

பூஜை செய்பவர் ஒவ்வொருவருக்கும் ஒரு அம்மன் முகம் இருப்பதால்(நோன்பு வழக்கம் இருந்தால்,திருமண சீராக அம்மன் முகம் தருவது வழக்கம்), சில வீடுகளில் ஒன்றிற்கு மேற்பட்ட அம்மன் முகங்கள் இருக்கும். அவற்றை ஒரு கலசத்திலேயே வைத்துக் கட்ட வேண்டும். யாராவது புதிதாகத் திருமணமாகி தலை நோன்பு எடுப்பதாக இருந்தால் மட்டும், அவர் பூஜை செய்யத் துவங்கும் அம்மன் முகத்தைத் தனிக் கலசமாக அலங்கரித்து வைக்க வேண்டும். மறுவருடத்திலிருந்து ஒரேகலசமாக வைக்கலாம்.

சிலர் அம்மனை முதல் நாளே அழைக்கும் இடத்தில் அலங்காரம் செய்து வைப்பார்கள். அப்படியானால், அழைக்கும் இடத்தில் கோலமிட்ட மணையை வைத்து ஒரு வாழை இலையை கிழக்கு மேற்காகப் போட்டு, அதில் ஆழாக்கு அரிசியைப் பரப்பி, அதன் மேல் கலசத்தை வைத்து, அருகில் விளக்கேற்றி, பூ, அட்சதை போட்டு, வெற்றிலை பாக்கு பழம் நிவேதனம் செய்து, கௌரி கல்யாணம் பாடி வரவேற்பார்கள். மறு நாள் பூஜை செய்யும் இடத்திற்கு அழைத்து வந்து பூஜிப்பார்கள். சில வீடுகளில் முதல் நாள் கலசத்தை அலங்கரித்து வைத்து விட்டு மறுநாளே அம்மனை அழைப்பார்கள்.

சில வீடுகளில், முதல் நாள் பெண்கள் எண்ணை ஸ்நானம் செய்து, மஞ்சள் பொங்கல் செய்து வடகம் பொரிப்பார்கள். திருமகள் வருகையைக் குறித்து இவ்வாறு செய்வது வழக்கம். சில வீடுகளில் தலைநோன்பு யாராவது எடுப்பதாக இருந்தால் மட்டும் முன் தினம் இவ்வாறு செய்வார்கள்.

அவரவர் வீட்டுப் பெரியவர்களைக் கேட்டுக் கொண்டு குடும்ப வழக்கப்படி செய்து கொள்வது நல்லது.

மாதா பிதா த்வம் குருஸத்கதி: ஸ்ரீ:
த்வமேவ ஸஞ்ஜீவந ஹேதுபூதா |
அந்யம் ந மந்யே ஜகதேக நாதே
த்வமேவ ஸர்வம் மம தேவி ஸத்யம் ||

நமது தொன்மையான கலாசாரத்தின் அழகே இம்மாதிரி பண்டிகைகளை, பழமை மாறாமல், புதுமையும் கலந்து கொண்டாடுவதில் தான் இருக்கிறது. பழங்காலத்தில், ஆடம்பரமின்றி, எளிமையாக அதே சமயம் நியமங்கள் மாறாமல் கொண்டாடப்பட்டு வந்த இந்தப் பண்டிகையில், காலத்திற்குத் தகுந்தபடி, சில மாறுதல்கள் ஏற்பட்டன.

உதாரணமாக, முன்பு வீட்டு மட்டோடு இருந்த இந்தப் பண்டிகை, இப்போது அக்கம்பக்கத்தவரை வேறுபாடின்றி அழைத்து, விழா போல விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மாவிலை கிடைக்காத இடங்களில், பிளாஸ்டிக் மாவிலை தோரணத்தோடு, செயற்கை பூ மாலைகள் அணிந்து, சிரித்த முகத்தோடு கொலுவிருக்கிறாள் தேவி. தன் மக்களின் நிலை அவளறியாமல் யார் அறிவார்?.

உள்ளத்தில் ஊற்றெடுக்கும் பக்தியொன்றைத் தவிர தன் மக்களிடம் யாதொன்றையும் எதிர்பாரா தயாபரியல்லவா ஸ்ரீ?

ஸ்ரீ வைணவத்தில், 'தாயார்' என்றே துதிக்கப்படும் அன்னையானவள், நாம் படுகின்ற துன்பத்தை, பெருமாள் உகக்கும் வண்ணம் ஏற்றிச் சொல்லி, அவர் கடைக்கண் பார்வை, நம்மீது பட்டு, நம் துன்பங்கள் நிவர்த்தியாகும் வண்ணம் அருள்புரிகிறாள்

வரலக்ஷ்மி விரதத்தன்று, அம்பிகையை தங்கள் வீட்டு மணப்பெண் போல அலங்கரித்து, அழைத்து, பூஜித்து, கொண்டாடி, பின் மறுநாள் பாடல்களால் மகிழ்வித்து, 'அடுத்த வருடம் மீண்டும் வந்து நல்லருள் புரிய வேண்டும்' என்ற வேண்டுதலோடு மாமியார் வீட்டுக்கு வழியனுப்பி வைக்கும் வரை இந்தப் பண்டிகை நீளுகிறது.

விரத தினத்தன்று காலை உபவாசம் இருந்து, பக்தியுடன் நியமமாகப் பூஜிக்க வேண்டும்.

பூஜையறையில், அலங்காரம் செய்யப்பட்ட, இடத்தில் ஒரு கோலமிட்ட மணையை வைத்து, ஒரு வாழை இலையைப் போட்டு, அதன் மேல் நெல்லைப் பரப்பி, அதன் மேல் மற்றொரு வாழை இலையைப் போட்டு அதன் மேல் அரிசியைப் பரப்பி வைக்கவும். ஒரு குழிவான வெள்ளி அல்லது பித்தளைத் தாம்பாளத்திலும் அரிசியைப் பரப்பி வைக்கலாம். கூஜா மாதிரியான பாத்திரத்தில் கலசம் வைப்பதாயிருந்தால் இவ்வாறு செய்யலாம். கலசம் அசையாதிருக்கும்.

  • ஒரு சிறு தட்டு அல்லது வெற்றிலையில், மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கவும். அட்சதை தயாரித்துக் கொள்ளவும்.
  • வாசனைச் சந்தனத்தைக் கரைத்து வைக்கவும். தாழம்பூ குங்குமம் பயன்படுத்துவது சிறந்தது.
  • ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, விநாயகருக்குத் தனியாகவும், அம்பிகைக்குத் தனியாகவும் வைக்கவும். தேங்காய், பழங்களையும், அம்மாதிரியே வைக்கவும்.
  • பூக்களைத் தயாராக வைக்கவும். ஸ்வாமி படங்களுக்கு சரங்களைச் சாற்றி, வீட்டுப் பெண்களும் தலைக்குப் பூ வைத்துக் கொள்ளவும். தாம்பூலம் தருவதற்குத் தனியாக பூ எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • விளக்கு, தீபக்காலில் திரியிட்டு நெய்/எண்ணை ஊற்றி வைக்கவும். கற்பூரத் தட்டில் கற்பூரம் வைக்கவும். ஊதுபத்தி/ தசாங்கம் எடுத்து வைக்கவும்.
  • காலையில் அம்மனை அழைப்பதானால், அதற்குத் தேவையான, விளக்கு முதலியவற்றை அந்த இடத்தில் எடுத்து வைக்கவும்.
  • நோன்புச் சரடில் 9 முடிச்சுக்களிட்டு, பூவையும் சேர்த்து முடிந்து வைக்கவும்.
  • அம்பிகைக்குச் சாற்ற, மாலை, கஜவஸ்திரம், புடவை/ரவிக்கைத் துணி போன்றவற்றையும் தயார் நிலையில் வைக்கவும்.
  • அர்க்யப் பிரதானத்திற்காக, காய்ச்சாத பால் ஒரு சிறு பாத்திரத்தில் வைக்கவும்.
  • பாத்யம் முதலானவைக்காக, தனியாக ஒரு சிறு பாத்திரம் வைக்கவும்.
  • மணி, முதலான பூஜை சாமான்களை எடுத்து வைக்கவும்.
  • அம்பிகையின் பஞ்சாமிர்த ஸ்நான உபசாரத்திற்காக, ஒரு பாத்திரத்தில், பால், தேன், நெய், தயிர், வெல்லம் ஆகியவை சேர்த்து வைத்துக் கொள்ளவும். பழம் சேர்க்கும் வழக்கம் பின்னால் தான் வந்தது.
  • ஸ்வர்ண புஷ்பத்துக்காக, ஒரு வெள்ளி அல்லது ஒரு ரூபாய் நாணயம் வைக்கவும்.
  • ஒரு தட்டில் மஞ்சள், குங்குமம் கரைத்து ஆரத்தி நீர் தயாரிக்கவும். நடுவில் இரண்டு நெய் தீபங்களை/ ஜோதி விளக்குகளை வைத்து ஆரத்தி எடுப்பது சிறப்பு.
  • 7 அல்லது 16 மா விளக்குகளைச் செய்து நடுவில் ஜோதித்திரி வைத்து எல்லாவற்றையும் ஒரே தட்டில் வைத்து ஆரத்தி எடுக்கலாம்.
  • பாயசம், கொழுக்கட்டை, வடை, இட்லி, மஹா நைவேத்தியம் முதலான நிவேதனப் பொருட்களைத் தயாரித்து வைத்துக்கொள்ளவும்.


பூஜையின் போது:

மிகுந்த பக்தி சிரத்தையுடன், சந்தோஷமான மனநிலையில் செய்வது முக்கியம்.

நம் வீட்டுப் பெண்ணாக அம்பிகையைப் பாவித்து, உபசாரங்கள் செய்ய வேண்டும்.

அம்மனை காலையில் அழைக்கும் வழக்கம் இருந்தால், அழைக்கும் இடத்துக்கு அம்மன் கலசத்தை கொண்டு வைத்து, விளக்கேற்ற வேண்டும். அம்மன் கிழக்குப் பார்த்தது போல் இருக்க வேண்டும்.

பூ, அட்சதை தூவி, ஸ்தோத்திரங்களைக் கூறி வழிபாடு செய்ய வேண்டும். தூபம் காட்டி, வெற்றிலை பாக்கு பழம் நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி, ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டும். "லக்ஷ்மி ராவே மா இன்டிகி' (லக்ஷ்மி தேவியே!!, எம் இல்லத்திற்கு வருவாய்)என்று அம்பிகையை வரவேற்று, வீட்டுப் பெண்கள் அனைவரும் கலசத்தை மெதுவாகத் தூக்கி வந்து பூஜை செய்யும் இடத்தில் வைக்க வேண்டும்.

அம்பிகைக்கு இரு புறமும் விளக்கேற்றி வைக்க வேண்டும். ஐந்து முகக் குத்து விளக்கில், ஐந்து முகங்களும் ஏற்றினால், அது திருக்கோவில் கருவறையில் இருக்கும் தெய்வ சாந்நித்யத்தைக் கொடுப்பதாக ஐதீகம். எனவே, ஐந்து முகக் குத்து விளக்கு ஏற்றலாம்.

ஆசன பூஜை, கண்டா பூஜை விக்னேஸ்வர பூஜை முதலான பூர்வாங்க பூஜைகளைச் செய்து விட்டு, அம்பிகைக்கு ஷோடசோபசார பூஜைகள் செய்ய வேண்டும்.

இதன் பின், அங்க பூஜை (பாதாதி கேசமாக, தேவியின் ஒவ்வொரு அங்கத்திற்கும்(உடல் உறுப்புகளுக்கும்) பூஜை) செய்ய வேண்டும்.

பின் ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்திரத்தைக் கூறி பூஜை செய்ய வேண்டும். அதன் பின், தூப தீபங்கள் காட்டி, தேங்காயை உடைத்து, நைவேத்தியங்களைப் பக்தியுடன் சமர்ப்பிக்க வேண்டும். பழங்களின் மேல், ஒரு துளசித் தளத்தைப் போட்டு, சமர்ப்பிக்க வேண்டும். தாம்பூலத்தை நிவேதனம் செய்ய வேண்டும். ஸ்வர்ண புஷ்பமாக, நாணயத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இதை மறு நாள் அம்மனை வழியனுப்பிய பின், பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம் அல்லது திருக்கோவிலில் சமர்ப்பிக்கலாம்.

பானகம் வைப்பது மிக முக்கியம்.

கற்பூர ஆரத்தி காட்டி, கைநிறையப் புஷ்பங்களை எடுத்து, மும்முறை ஆத்மபிரதக்ஷிணம் செய்து தேவிக்குச் சமர்ப்பிக்கவேண்டும்.

அஷ்ட லக்ஷ்மியோடு, வரலக்ஷ்மியையும் சேர்த்து ஒன்பது லக்ஷ்மிகள். ஒன்பது லக்ஷ்மிகளுக்காக நோன்புச் சரடில் ஒன்பது முடிச்சுக்களிடுகிறோம். சரடுகளைப் பூஜித்து, அம்பிகைக்கு ஒன்றைச் சாற்றி விட்டு, தேங்காய்,வெற்றிலை பாக்கு பழத்தைக் கையில் வைத்துக் கொண்டு, மந்திரங்களைச் சொல்லி, சரடைக் கட்டிக் கொள்ளவும். முதலில் வயதில் மூத்த பெண்மணிகளுக்கு மற்ற யாராவது கட்டி விட்டு, பின் அவர் கையால் மற்றவர்கள் கட்டிக் கொள்ளலாம்.

பூஜைப்பலன் முழுமையாகக் கிடைப்பதற்காக, பூ,சந்தனம், ஒரு பழம் இவற்றுடன், பால் சேர்த்து, தேவிக்கு அர்க்யம் சமர்ப்பிக்கவும்.

தேவிக்கு ஆரத்திகள் காட்டி வழிபாடு செய்யவும்.
தேவியை, மனமாரப் பிரார்த்தித்து, பூஜையின் போது ஏதேனும் குற்றங்கள் ஏற்பட்டிருப்பின் மன்னிக்கக் கோர வேண்டும்.

வரலக்ஷ்மி விரத பூஜைக் கதையைப் பாராயணம் செய்யலாம். தலை நோன்பு எடுப்பவர்கள், இந்தப் பூஜையுடன், கிரஹப் ப்ரீதியும் சேர்த்துச் செய்வது வழக்கம்.

வீட்டு உபாத்தியாயருக்கு, தாம்பூலம், தட்சிணையோடு, பிரசாதங்களை வழங்கி அவர் ஆசி பெறுதல் வேண்டும். பிரசாதங்களை விநியோகிப்பது முக்கியம். இயன்றவர்கள், அன்னதானம் செய்யலாம்.

விரத தினத்தன்று, பூஜை செய்தவர்கள், பிரசாதங்கள், பலகாரம்(டிபன்) சாப்பிடுவதே வழக்கம்.

அன்று முழுவதும், மறு நாளும் தேவி நம்மோடு இருக்கிறாள். ஆகவே, இல்லத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவுவது முக்கியம். அம்மன் துதிப்பாடல்களைப் பாடி வழிபாடு செய்யலாம்.

சிலர், அன்று வெள்ளிக்கிழமையாக இருப்பதால், பெண்களை அழைத்துத் தாம்பூலம் தருவது வழக்கம்.

மறு நாள், சனிக்கிழமை, சுருக்கமாகத் தேவிக்குப் புனர் பூஜை செய்து, மஹா நைவேத்தியம் (பச்சரிசிச் சாதம், பருப்பு, நெய் சேர்ந்தது), தாம்பூலம் நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும். சில வீடுகளில் தயிர் சாதம் நிவேதனம் செய்வார்கள்.

அன்று மாலை, அக்கம்பக்கத்தோரை அழைத்து, தேவி முன் வரம் கோரல் பாடல்களைப் பாட வேண்டும். யார் யாருக்கு என்ன வரம் வேண்டுமோ, அவர் பெயரைச் சொல்லி, வரம் கேட்டுப் பாடுவது வழக்கம். திருமணமாக வேண்டும், வேலை கிடைக்க வேண்டும் என்பதிலிருந்து, பாப்பாவுக்குப் பருப்பு சாதம் வேண்டும் என்பது வரை அமைத்துப் பாடுவது வழக்கம்.

அதன் பின், தேவிக்குச் சுண்டல் நிவேதனம் செய்து, வந்திருப்போருக்குத் தாம்பூலம் தந்த பின், ஆரத்தி எடுத்து, புஷ்பம் அக்ஷதை சமர்ப்பித்து, 'அடுத்த வருடம், கட்டாயம் நம் இல்லம் எழுந்தருளி அருள் மழை பொழிய வேண்டும்' என்ற வரம் வேண்டி, அம்பிகையை யதாஸ்தானம் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

மதுரை மாவட்டத்தில், தேவியைக் கலசத்தோடு அரிசிப்பானைக்குள் வைப்பார்கள். பானைக்கு முன், சிறு கோலமிட்டு, ஒரு சிறு விளக்கேற்றி, வெற்றிலை, பாக்கு, பழம், பால் வைத்து ஊதுபத்தி ஏற்றி வைப்பார்கள். பின் அரிசிப்பானை இருக்கும் அறைக்கதவை மூடி, சயனப்பாட்டைப் பாடுவார்கள்.
அடுத்து வரும் வெள்ளிக் கிழமை அன்று கலசத்திற்கு உபயோகித்த அரிசி, தேங்காயை, பாயசமாகச் செய்து நிவேதிப்பது வழக்கம்.

முறையாகப் பூஜித்து வழிபடுவோருக்கு அன்னை வேண்டும் வரங்களைத் தருகிறாள்.ஆடம்பரமாகப் பூஜை செய்வதை விட, எளிமையும் ஆத்மார்த்தமுமாகப் பூஜிப்பதையே அன்னை விரும்புகிறாள். ஆகவே, எளிய பூஜை, இயன்ற நிவேதனங்கள், அளவிலா பக்தி இவற்றை அன்னைக்குச் சமர்ப்பிப்பது அன்னையை மகிழ்விக்கும். தாம்பூலத்திற்கு அனைவரையும் வேறுபாடில்லாமல் அழைத்துக் கொடுப்பதும், அது போல், யார் தாம்பூலத்திற்கு அழைத்தாலும் சென்று வருவதும் முக்கியம்.

வரலக்ஷ்மியை பூஜித்து, வரம் பல பெற்று,வெற்றி பெறுவோம் !!!!

ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ !

சக்தி வாய்ந்த அஷ்டாதச பீட ஸ்தோத்ரம் ( ஆடி 18 பெருக்கு சிறப்பு பதிவு - 03.08.2017 )

Image result for sakthi peetam

அன்னை பராசக்தி அருளாட்சி செய்யும் அஷ்டாதச பீடங்கள் (பதினெட்டு பீடங்கள்) மிகவும் சிறப்பானவை. பொதுவாகவே, பதினெட்டு என்பது மிகச்சிறப்பான எண் என்பார்கள். அதில் தேவியின் திருவருளும் சேரும்போது அது அதி உன்னதமான பலனைத் தரும் என்பது நிச்சயம்.

ஆடி 18 ஆம் பெருக்கு அன்று, சிறப்பான பதினெட்டு சக்தி பீடநாயகிகள் பெயரைச் சொல்லி துதிப்பது பதினாறு பேறும் தரும் என்பது ஐதீகம்.

மேலும், ஆடி மாத பௌர்ணமி, ஆடி வெள்ளி போன்ற நாட்களில் துதிப்பதும் விஷேஷம். தினமும் படிப்பதால் வாழ்க்கை வளமாகும். இந்த துதியை தினமும் சாயங்காலத்தில் சொல்வதால் சகல சம்பத்தும் சேரும்.

அஷ்டாதச பீட ஸ்தோத்ரம்

லங்காயாம் சாங்கரீ தேவி காமாக்ஷி காஞ்சிகாபுரே |
ப்ரத்யும்னே ஸ்ரிங்கலாதேவி சாமுண்டி க்ரௌசபட்டணே ||

ஆலம்புரே ஜோகுலாம்பா ஸ்ரீசைலே ப்ரம்ராபிகா |
கோலாபுரே மஹாலக்ஷ்மி மாஹீர்யே ஏகவீரிகா ||

உஜ்ஜயின்யாம் மகா காளி பீடிகாயாம் புருஹ்ருதிகா |
ஒட்டபாயாம் கிரிஜாதேவீ மாணிக்யா தக்ஷவாடஹா ||

ஹரிக்ஷேத்ரே காமரூபா ப்ரயாகே மாதேஸ்வரி |
ஜ்வாலாயாம் வைஷ்ணவிதேவி கயா மங்கள கௌரிகா ||

வாரணாஸ்யாம் விசாலாக்ஷி காஸ்மீரேஷி சரஸ்வதி |
அஷ்டாதச பீடாணி யோகீனாமபி துர்லபம் ||

சாயங்காலே படேன் நித்யம் சர்வ சத்ருவிநாசகரம் |
சர்வ ஹரம் திவ்யம் ரோக சர்வ சம்பத்கரம் சுபம் ||

பொருள் :
இலங்கை சங்கரி; காஞ்சிபுரம் காமாக்ஷி; ப்ரத்யும்னம் ஸ்ருங்கலாதேவி; க்ரௌஞ்சபட்டணம் சாமுண்டி; ஆலம்புரா ஜோகுளாம்பாள்; ஸ்ரீசைலம் ப்ரம்ராம்பிகா; கோலாப்பூர் ஸ்ரீமகாலக்ஷ்மி; மாஹீரில் ஏகவீரிகா; உஜ்ஜயினி மகாகாளி; பீடிகா புருஹ்ருதிகா; அயோத்தி கிரிஜாதேவி, தட்சவாடகம் மாணிக்யா தேவி; கௌஹாத்தி காமரூபா; ப்ரயாகைமாதவேஸ்வரி. கயை மங்களகௌரி, வாரணாசி விசாலாக்ஷி; காஷ்மீரம் சரஸ்வதி என பதினெட்டு திவ்ய பீடங்களில் வசிப்பவளை; மஹாயோகிகளும் காண அரிதானவளை மனப்பூர்வமாக வணங்குகிறேன்.

தினமும் சாயங்கால நேரத்தில் இத்துதியைச் சொல்வதால் எதிரிபலம் குன்றும்; வீண் பயம் அகலும்; எல்லாத் துன்பங்களும் அகலும்; அனைத்து ரோகங்களும் குணமாகும். சகல செல்வங்களும் சேரும்.

ஓம் சக்தி !

Posted by Mutharamman Satsangam




Jul 27, 2017

நாக சதுர்த்தி / கருட பஞ்சமி (27.07.2017, 28.07.2017)

ஆடியில் வரும் வளர்பிறை சதுர்த்தி சிறப்பு மிக்கது. இந்நாளில் சர்ப்பராஜர் எனப்படும் நாகராஜாவை வழிபட்டால் ராகு,கேது தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். நாகசதுர்த்தி நாளில் நாகருக்கு மஞ்சள் காப்பு அணிவித்து புது வஸ்திரம் கட்டி பால் அபிஷேகம் செய்து வழிபடலாம்.

கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் நாக சதுர்த்தி/பஞ்சமி நாளில் பூஜை செய்தால் கால சர்ப்ப தோஷத்தினால் ஏற்படும் இன்னல்கள் குறையும். மேலும், அவர்கள் கோயிலுக்கு சென்று அரசமரத்தடியில் உள்ள நாகர் சிலா ரூபத்திற்கு, மஞ்சள், குங்குமமிட்டு, பால் சமர்ப்பித்து, மலர்களால் கீழ்கண்ட ஸ்தோத்ரத்தை சொல்லி பூஜித்தால் நிச்சயம் இன்னல்களிலிருந்து விடுபட முடியும். 

அனந்தம் வாஸூகிம் ஸே²ஷம் பத்³மனாபம் ச கம்ப³லம்|
ஸ²ங்க²பாலம் தார்தராஷ்ட்ரம் தக்ஷகம் காலியம் ததா² ||
ஏதானி நவ நாமானி நாகா³னாம் ச மஹாத்மனாம் |
ஸாயங்காலே படே²ன்னித்யம் ப்ராத: காலே விஸே²ஷத: ||
தஸ்மை விஷபயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ பவேத் ||

நாகராஜனுக்கு உரிய சுலோகம்

"நாகராஜ மஹாபாகு ஸர்வாபீஷ்ட 
பலப்ரத நமஸ்கரோமி
தேவேச த்ராஹிமாம் கருணாநிதே
உமா கோமள ஹஸ்தாப்ய ஸம்பாவித 
லலாடகம்  ஹிரண்ய குண்டலம் 
வந்தே குமாரம் பஷ்கரஸ்ரஜம்'.

நாகர்கோவில் நாகராஜா கோயில், ராகு தலமான திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயில், கேது தலமான கீழப்பெரும்பள்ளம் (நாகப்பட்டினம் மாவட்டம்) கைலாசநாதர் கோயில்களில் வழிபடுவது சிறப்பு. புத்திர தோஷம் நீங்கி விரைவில் மழலைச் செல்வம் உண்டாவதற்கும், சகோதர பாசம் தழைக்கவும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். 

இந்த விரதத்தின் பின்னணியில் அன்பு மயமான ஒரு வரலாறும் உண்டு.

ஒரு வீட்டில் 7 சகோதரர்களுக்கு ஒரே ஒரு தங்கை. பெற்றோர் காலமாகிவிட்டதால், சகோதரர்கள்  அந்தத் தங்கையை கண் போல பார்த்துக்கொண்டார்கள்.

வயலில் வேலை செய்யும் சகோதரர்களுக்கு அவள் தினமும் மதியம் கஞ்சி எடுத்துச் செல்வாள். அன்று அவள் கஞ்சி எடுத்துக்கொண்டு போகும்போது மேலே கருடன் ஒன்று ஒரு பாம்பைக் கவ்விக்கொண்டு போனது. கருடன் வாயில் சிக்கித் தவித்த பாம்பு விஷத்தைக் கக்க அது கஞ்சியில் விழுந்தது.

அதை அறியாமல், அவள் விஷம் விழுந்த கஞ்சியைத் தன் சகோதரர்களுக்குக்  கொடுக்க அவர்கள் அனைவரும் மாண்டுவிட்டனர். அதைக் கண்ட அவள் தானும் அதைக் குடித்து உயிர் விட நினைத்தாள். அப்போது  வயது முதிர்ந்த ஒரு தம்பதியர் அவளைத் தடுத்து நாக பஞ்சமி / கருட பஞ்சமி விரதம் கடைப்பிடிக்கச் செய்து, விரதத்தின் நிறைவில் அட்சதை, புற்றுமண் ஆகியவற்றை உடன்பிறந்தவர்களின் வலது காதில்  வைக்கச் சொல்ல அவளும் அப்படியே செய்தாள். சகோதரர்களும் உயிர் பெற்று எழுந்தனர்.

நாகசதுர்த்தியன்று நோன்பிருந்து , புற்றுக்கு பால் வார்த்து பின் வீட்டில் 7 முடி போட்ட நோன்புக் கயிறு அணிந்து பூஜை செய்து கணவருக்காக வேண்டிக்கொள்வர்.

மறுநாளும் புற்றுக்குச் சென்று பால்வார்த்த பின் புற்று மண் எடுத்து வந்து சகோதரரின் வலது காதில் வைப்பார்கள். இதனால் சகோதர ஒற்றுமை உண்டாகும்.

கணவரின் நலனுக்காகவும், பிள்ளைகளின் நலனுக்காகவும் நாகசதுர்த்தி அன்றும், சகோதரர்களின் ஒற்றுமைக்காகவும் அவர்களின் தீர்க்காயுளுக்காகவும் கருடபஞ்சமி அன்றும்  விரதம் இருந்து பிரார்த்திப்போம். 

இன்று காலையில் நோன்பு இருக்க மறந்தவர்கள் மாலையிலாவது அருகில் இருக்கும் கோயிலுக்குச் சென்று அங்கு புற்று இருந்தால் அந்தப் புற்றில் பால் வார்த்து பிரார்த்தித்துக் கொள்ளலாம். புற்று இல்லாத கோயில்களில் அங்கே பிரதிஷ்டை செய்திருக்கும் நாகர் சிலைகளை வழிபட்டு அருள்பெறலாம்.

Posted by Mutharamman Satsangam 

Jul 24, 2017

ஆடிச் செவ்வாய் தேடிக்குளி !

Image result for ஆடி செவ்வாய் ராகு


ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். செவ்வாய்க் கிழமைகளில் இராகு காலத்தில் அம்பிகையை பூசிப்பது விசேடமானது.

செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் இராகுகாலத்தில் வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமணப் பாக்கியமும், பிள்ளைப் பாக்கியமும் கிடைக்கும்.

விவாகமான பெண்கள் தம் கணவனின் குறையாத அன்பைப் பெறவும், , மாங்கல்யம் நிலைக்கவும் இவ்விரத்தை அனுஷ்டிக்கின்றனர்.

"ஆடிச் செவ்வாய் தேடிக்குளி" என்ற பழமொழி ஒன்றே இவ் விரதத்தின் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது.

செவ்வாய் கிரகம் சனிக் கிரகம்போல் ஒரு ஜாதகருக்குப் பெரும் தோஷத்தை (கஷ்டத்தை)  ஏற்படுத்தக் கூடியது. செவ்வாய், சனி போன்ற பாவக் கிரகங்கள் கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர்வீச்சுக்கள் எம்மைத் தீவிரமாக தாக்குகின்றன. அதனால் அந்த ஜாதகர் உடல்,  உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார். தீய கிரகங்களில் இருந்து வரும் கதிர்களை நல்லெண்ணையில் (எள் எண்ணை) சுவறிய எமது உடம்பு, தாக்க விடாது தடை செய்கின்றது. தீய கதிர்கள் எம் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணைமுழுக்கு என யூகிக்க முடிகின்றது. எனவே, ஆடி செவ்வாய் கிழமையில், மங்கள ஸ்நானம் செய்வது வழக்கமானது. 

மேலும், செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் வைத்து, மஞ்சள் பூசிக் தோய்ந்து விரதம் அனுஷ்டித்து அம்மனை வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலம் கூடும், தோஷங்கள் நிவர்த்தியாகும், மாங்கல்யத் தடை நீங்கும், பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

முத்தாரம்மன் சத்சங்கம்

ஆடிப்பூரம் (26.07.2017)


சூடித் தந்த சுடர் கொடி ஆண்டாள் நளவருடம், ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை, பூர நட்சத்திரத்தன்று அவதரித்தாள். அதனால், ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆடிப்பூரம் அன்று பெரும் தேர் திருவிழா நடைபெறும்.

வைணவக் கோவில்களில் மட்டுமல்லாது,அம்பிகை திருக்காட்சி தந்தருளும் அனைத்துத் திருக்கோவில்களிலும் திருவாடிப்பூரம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவாடிப்பூரத்தன்று, அம்பிகைக்கு வளைகாப்பு நடந்ததாக ஐதீகம். ஆகவே, பெரும்பாலான கோவில்களில் அம்பிகைக்கு வளைகாப்பு உற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. 

திருநெல்வேலி காந்திமதியம்மனுக்கு, ஆடிப்பூர விழாவின் நான்காம் நாளன்று, ஊஞ்சல் மண்டபத்தில்நடைபெறும் வளைகாப்பு விழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரப்படும் வளையலை வாங்கி அணிந்து கொள்ளும் பெண்களுக்கு விரைவில் வளைகாப்பு வைபவம் நடப்பது உறுதி என்பது நம்பிக்கை.

அன்னை ஆதிபராசக்தி சுயம்புவாக அருள்பாலிக்கும் மேல்மருவத்தூரிலும் ஆடிப்பூர உற்சவம் வெகு விமரிசையாக நடக்கிறது.

ஆடிப்பூரத்தன்று மீனாட்சியம்மன் உற்சவர் கருவறைக்கு எழுந்தருளுவார். அங்கு மீனாட்சிக்கும், உற்சவருக்கும் ஒரே சமயத்தில் உற்சவம் நிகழ்த்தப்படும்...

பெரியபாளையத்தில் வேப்பஞ்சேலை கட்டி பக்தர்கள் ஆடி வரும் திருவிழா மிகவிமரிசையாக ஆடிபூரம் அன்று நடைப்பெறும்.

அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள் செய்விக்கப்பட்டு, அம்பிகை வளையல் அலங்காரத்தில் அருள் மழை பொழிகிறாள். எல்லா கோயில்களிலும் அம்பாளுக்கு வளையல் சாற்றுவார்கள், பக்தர்கள் காணிக்கையாக தரும் வளையல்களை அம்மனுக்கு சாற்றிவிட்டு பின்னர் அதை மங்கள பிரசாதமாக தரும் வளையல்களை அணிந்துகொண்டால் திருமண பாக்யம், குழந்தை பாக்யம் ,சகல நலங்களையும், வளங்களையும், நீங்காத செல்வத்தையும் பெறலாம் என்பது நம்பிக்கை.

திரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்தாள் வாழியே !

Related image

திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்தப் பெண்பிள்ளாய் வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்தி மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே
திருவைகுந்த வாசன், ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் திருத்தேவியருள் ஒருவரான, ஸ்ரீ பூதேவி நாச்சியாரே ஸ்ரீ ஆண்டாளாக திருஅவதாரம் செய்தருளினார். அவர் அருளிய திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும், வேத, வேதாந்த, உபநிஷத சாரமாகவே கருதப்படுகிறது.
"இன்றோ திருவாடிப்பூரம் எமக்காகவன்றோ இங்காண்டாள் அவதரித்தாள்
குன்றாத வாழ்வான வைகுந்த வான் போகத்தை இழந்து பெரியாழ்வார் திருமகளாராய்'
சூடித் தந்த சுடர் கொடி ஆண்டாள் நளவருடம், ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை, பூர நட்சத்திரத்தன்று அவதரித்தாள்.

திருவில்லிப்புத்தூரில் 'பெரியாழ்வார்' எனப் பின்னாளில் போற்றப்பட்ட, ஸ்ரீ விஷ்ணு சித்தரின் நந்தவனத்தில், திருத்துழாய்ச் செடியருகில், திருவாடிப்பூரத்தன்று, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தசி திதியும் கூடிய சுபதினத்தில், மண்ணுலகத்தோரை வாழ்விக்க, அழகே உருவாகி, ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அவதரித்து அருளினார். அவருக்குக் 'கோதை' என்னும் திருநாமம் சூட்டி வளர்த்தார் ஸ்ரீ விஷ்ணு சித்தர்.பரம ஞானத்தை, தந்தையே குருவாக இருந்து போதிக்க, அல்லும் பகலும் கண்ணன் திருவடிகளையே எண்ணி வளர்ந்தார்.
கண்ணனையே தம் மணாளனாக வரித்து, 'மணந்தால் கண்ணனையே மணப்பது'என்று உறுதி பூண்டார்.
ஸ்ரீ வடபத்ரசாயிப் பெருமாளுக்குச் சூட்டுதற்காக தந்தை வைத்திருந்த பூமாலையை, தம் திருக்கழுத்தில் சூடி, கிணற்று நீரில் தம் திருமுகம் நோக்கி அழகு பார்ப்பார் (அந்தக் கிணறு 'கண்ணாடிக் கிணறு' என்ற பெயருடன் திருவில்லிப்புத்தூரில் இருக்கிறது). ஒரு நாள் இதைக் கண்ணுற்று, விஷ்ணுசித்தர் தம் திருமகளாரைக் கடிந்து கொண்டார். பின் வேறொரு மாலை கட்டிச் சென்று திருமாலுக்குச் சாற்ற, அவரோ, 'கோதை சூடிக் கொடுத்த மாலையே எமக்கு உகப்பு' என்று திருவாய்மொழிந்தருளினார். அதன் பின், நாடோறும், கோதை சூடிக் கொடுத்த மாலையே திருமாலுக்குச் சாற்றலாயினர்.
பூமாலையோடு அனுதினமும் அருந்தமிழ்ப் பாசுரங்களால் பாமாலையும் சூட்டிப் பரமனை வழிபட்டார் கோதை நாச்சியார். ஆண்டாள் என்ற திருநாமத்திற்கு, அளவிலா பக்தியால் எம்பிரானை ஆண்டாள், அற்புதப் பாசுரங்களால் தமிழை ஆண்டாள், அன்பால் பக்தர் நெஞ்சமெல்லாம் ஆண்டாள் என்று பலவாறு பொருளுரைக்கலாம்.
பெருமானையே மணாளனாக அடைதற் பொருட்டு, மார்கழி மாதம் 30 நாளும் பாவை நோன்பு நோற்றார். 'நெய்யுண்ணோம், பாலுண்ணோம்' என்று நியமங்களுடன், பரமன் திருவருளை தான் மட்டுமில்லாமல், அனைவரும் பெறுதற் பொருட்டு திருவில்லிப்புத்தூரிலிருக்கும் தம் தோழிப் பெண்களுடன் இணைந்து, இந்நோன்பைச் செய்தருளினார்.
தாம் வசித்த திருவில்லிப்புத்தூரையே கோகுலமாக, வடபத்ரசாயியின் திருக்கோவிலையே நந்தகோபன் திருமாளிகையாக, தாமும் தம் தோழியரும் கோபிகைகளாக மனதினுள் வரித்துக் கொண்டு கோதை நாச்சியார் பாடியருளிய முப்பது திருப்பாடல்கள் ஒவ்வொன்றும், மங்கலமான சொற்கள், பொருளுடன் அமைந்த தமிழ்ச்சுரங்கம். 'அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல' பொறுமையால் நம் அனைவரையும் தாங்கும் பூமாதா, அளவுக்கு மீறி அகழ்ந்தாலும் பொன்னும் மணியும் தம் மடியிலிருந்து மானுடர்க்கு வழங்கி மகிழும் நிலமகள், படிக்கப்படிக்கத் திகட்டாமல், அள்ள, அள்ளக் குறையாத ஆழ்ந்த தமிழ்ச்சுவையுடன் பாசுரங்களை வழங்கியதில் வியப்பென்ன?!!
தம் திருமணக் கோலத்தை கனவில் கண்டருளி, அந்தக் காட்சியை, 'வாரணமாயிரம்' எனத் தொடங்கும் திருப்பாசுரங்களாக இயற்றியருளினார்.
'மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என்ற தம் இறையருட் செல்வியின் திருவுள்ளம் அறிந்த விஷ்ணுசித்தர், திருமாலிடம் முறையிட்டார். திருமால் திருவாய் மலர்ந்தருளியபடி, திருவரங்கத்துக்குத் தம் திருமகளாரை அழைத்துச் சென்றார். பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்தில் எம்பெருமான், கோதை எனும் திருப்பெயர் சூடி வளர்ந்த பூமாதேவி நாச்சியாரைத் தம்முடன் இணைத்துக் கொண்டார். திருவரங்கமே திவ்ய தேசங்களுள் முதலாவதாக அமைந்துள்ளது. நிறைவாக (ஸ்தூல சரீரத்துடன் தரிசிக்கும் வண்ணம்) அமைந்துள்ளது திருவில்லிப்புத்தூர். ஆகவே, பூமாலையும், பாமாலையும் சூட்டி வழிபட்ட கோதை நாச்சியார், திவ்ய தேசங்களை மாலையாகச் சூடியவராக வழிபடப்படுகிறார்.
திருமகள் போல் வளர்ந்த தம் செல்வி, திருமாலை அடைந்ததில் அகமகிழ்ந்தாலும், வளர்த்த பாசத்தால்,
ஒரு மகள் தன்னை உடையேன்
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன்'
செங்கண்மால்தான் கொண்டு போனான்.
என மனம் கசிந்தார் விஷ்ணுசித்தர்.
ஆண்டாள் நாச்சியார், பெருமான் மீது கொண்ட பக்தி மீதுற, அவர் திருவாய் எவ்வித மணமுடையது என்று அவர் திருக்கரங்களிலிருக்கும் 'பாஞ்சசன்யம்' என்ற திருப்பெயரையுடைய சங்கைக் கேட்பது போல் அமைந்த பாசுரங்கள் சிறப்புடையவை.

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே
உன்னோடு டனேயொ ருகடலில் வாழ்வாரை
இன்னாரி னையாரென் றெண்ணுவா ரில்லைகாண்
மன்னாகி நின்றம துசூதன் வாயமுதம் பன்னாளு
முண்கின்றாய் பாஞ்சசன் னியமே (ஏழாம் திருமொழி)
மேலும்,
“மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடா நிறைந்த வெண்ணை வாய் நேர்ந்து பராவி வைத்தேன் நூறு தடா நிறைந்த அக்காரவடிசல் சொன்னேன்.”
என்ற ஸ்ரீ ஆண்டாளின் வேண்டுதலை, பின்னாளில் உடையவரான ஸ்ரீ ராமானுஜர் நிறைவேற்றி வைக்க, அதன் காரணமாக, அவர் திருவில்லிப்புத்தூர் திருக்கோவிலுள் திருமாலைச் சேவிக்கச் செல்லும் போது, ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியில் இருந்து, 'வாரும் எம் அண்ணலே' என்ற முகமன் சொல் கேட்டது. ஸ்ரீ ஆண்டாள் விக்கிரகம், இரண்டடி முன் வைத்து, தம் வேண்டுதலை நிறைவேற்றிய, ஸ்ரீ ராமானுஜரை, தம் தமையனார் ஸ்தானத்தில் வைத்து இவ்வாறு திருவாய் மலர்ந்தருளியதன் காரணமாகவே, 'பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே' என்ற வாழி திருநாமம் ஏற்பட்டது.
ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷியே, ஸ்ரீ ஆண்டாளின் திருக்கரங்களிலிருக்கும் கிளியாக அமர்ந்திருக்கும் பாக்கியம் பெற்றவர். திருவரங்க நாதனிடம் ஆண்டாளுக்காகத் தூது சென்ற காரணத்தால் இந்தப் பேறு அவருக்குக் கிட்டியது. ஸ்ரீ ஆண்டாளின் இடத்தோளை அலங்கரிக்கும் இந்தக் கிளி, தினமும் புதிதாகச் செய்யப்பட்டு, சாயரட்சை பூஜையின் போது நாச்சியாரின் திருக்கரங்களில் சமர்ப்பிக்கப்படுகிறது. மறு நாள் காலையில் இது பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பெறுவோரின் பாக்கியம் அளவிடற்கரியது. குறிப்பாக, இந்தக் கிளியை வாங்கி வந்து தம் இல்லத்தில் வைப்பதால் திருமணத் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
இதைப்போல, தம் திருமண சமயத்தில் திருவரங்கநாதர் எழுந்தருளத் தாமதமானதால் திருவரங்கநாதரை அழைத்து வரும்படி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், கருட பகவானை வேண்டினார். அவ்வாறு செய்தால் தம் அருகிலேயே இருக்கும் வரமருளுவதாக வாக்களித்தார். அவ்வண்ணமே கருடபகவான் செய்ததால், இன்றும், திருவில்லிப்புத்தூரில் மட்டும், பெருமாளுடன், கருடாழ்வார், ஆண்டாளின் அருகில் திருக்காட்சி அருளுகிறார்.

திருவில்லிப்புத்தூரில், பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான‌ ஸ்ரீ ஆண்டாளின் அவதார தினமான திருவாடிப்பூரம் மிகப் பெரும் விழாவாக எட்டு நாட்கள் கொண்டாடப்பட்டு ஆடிப்பூரத்தன்று தேர்த்திருவிழா நடைபெறுகிறது. திருவில்லிப்புத்தூர் தேர் மிகப் பெரியதும் சிறப்புடையதுமாகும்.

ஆடிப்பூரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்த் திருவிழா நடக்கும், தமிழகத்திலேயே மூன்றாவது இடம் வகிக்கும்மிகப்பெரிய தேரில் பல தெய்வங்கள் ரிஷிகள் முனிவர்கள் செதுக்கப்பட்டுள்ளன. 

ராமாயணம் மகாபாரதத்திலிருந்தும் காட்சிகள் விவரிக்கப்பட்டுள்ள தேரின் வடத்தை இழுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதர்கள் தேவைப் படுகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தேரோட்ட உற்சவம் நடக்கும் தேரின் உயரம் அநேகமாக கோபுரத்தைத் தொட்டு விடும். ஆடிப்பூரத்தில் பனை ஓலைக் குருத்துக்களால் ஆன தேர் ஒன்று தஞ்சாவூரிலிருந்து வந்து சேரும். பதினாறு கால்களைக் கொண்ட அந்தச் சப்பரத் தேரை பல வல்லுனர்களும், கைதேர்ந்த கலைஞர்களும் வடிப்பார்கள். 

ஆண்டாள் பிறந்த ஆடிப்பூரத்தன்று நந்தவனத்திற்கு எழுந்தருள்கிறபோது ஆண்டாள் பாடிய திருப்பாவை, நாச்சியார்திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படுகிறது.

ஆடிப்பூர நாயகியான ஆண்டாள் 108 வைணவ திவ்யதேச அத்தனை எம்பெருமாள்களும் சுயம்வரத்தில் அருளாசி வழங்க மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத, பல்லாண்டு பல்லாண்டு பல்லயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் பாசுரங்கள் இசைக்க இறைவனுடன் இரண்டற கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி நூல்களை நமக்கு அருளித் தந்துள்ளார்.
எப்படி வாழ வேண்டும், எப்படி பக்தி செலுத்த வேண்டும் என்பதை இந்த பாசுரங்களில் உணர்த்தியிருக்கிறார். 
கணவன் வீட்டில் எவ்வளவு மகிழ்ச்சி கிடைத்தாலும், பிறந்த வீட்டிற்கு செல்லும்பெண் கூடுதலான மகிழ்ச்சியுடன் இருப்பாள். எனவே ஆடிப்பூரத்தன்று நந்தவனத்திற்கு செல்லும் வேளையில், அவளை வழிபட அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறும் ...

பகவானின் கைத்தலம் பற்றி, வடிவாய் அவன் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையாக அருள்பாலிக்கும் ஆண்டாள் பூமிப்பிராட்டியின் அவதாரம் !!
திரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்தாள் வாழியே!
திருப் பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!

ஆண்டாள் திருவடிகளே சரணம் !

MUTHARAMMAN SATSANGAM

Jul 22, 2017

பித்ரு தோஷம் நீக்கும் ஆடி அமாவாசை (23.07.2017)

Image may contain: text

சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. இதில் ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும்.


ஆடி அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது.
பெற்றோருக்கு திதி கொடுக்காதவர்கள், திதி கொடுப்பதே என்ன என்று தெரியாமல் இருப்பவர்கள், வாரிசு இல்லாதவர்கள், விபத்து, தற்கொலை, அகால மரணமடைந்தவர்கள்… இவர்களின் ஆத்மாக்களுக்கு சாந்தி ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் தோஷம் ஏற்படும். இவை காலம் காலமாக தொடர்வதால் பித்ரு தோஷம் ஏற்பட்டு கால சர்ப தோஷமாக மாறும்.



இது வம்சாவளியாக தொடர்வதால் வீட்டில் கஷ்டம், திருமணத்தடை, விபத்து, செய் தொழிலில் நஷ்டம், நிம்மதியின்மை என அடிக்கடி நிகழும். இதற்கு ஒரே வழி அதற்கான தோஷ நிவர்த்தி செய்வது தான்…



அமாவாசைதோறும் திதி கொடுக்க இயலாதவர்கள்கூட வருடத்தில் மூன்று அமாவாசைகளில் அவசியம் திதி கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. ஆடி, புரட்டாசி, தை ஆகிய மூன்று அமாவாசைகளில் கண்டிப்பாக நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும்.


ஆடி அமாவாசை முக்கியமானது. அன்றைய தினம் கடல், நதிகள் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்க்கு திதி கொடுப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.


அவரவர் குடும்ப வழக்கப்படி வீட்டில் படையல் இட்டு வழிபட்டு முன்னோர் நினைவாக இல்லாதோர், இயலாதோர், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம், உடை, போர்வை போன்றவற்றை வழங்குவது பல்வேறு பாவங்களை நீக்கி புண்ணிய பலன்களை சேர்க்கும்.

ஆடி அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது.


அன்றைய தினம் ஒரு கதையை படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சௌமாங்கல்யத்துடன் வாழ்வார்கள்.

விரதம் சரி ,அது என்ன கதை எதற்காக அதை சொல்ல வேண்டும்?

அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதை தீர்த்துக்கொள்ள அவன் தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்த போது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன் இளமைப்பருவத்தை எட்டும் போது இறந்து போவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான்.

மன அமைதிவேண்டி அவன் பல கோவில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளி கோவில் ஒன்றில் அவன் வழிபட்ட போது உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை.

அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது. இளமை பருவம் வந்தால் இளவரசன் ஒருநாள் இறந்து போனான்.

மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்து போன இளவரசனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளை காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்த பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள்.

விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள்... தனக்கு தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள்.

இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர் பெற்று எழச்செய்தாள். இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடி மாத அமாவாசை நாளாகும்.

தனக்கு அருளிய தேவியிடம் அந்த பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெற செய்தது போலவே இந்த நாளில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள்.

மகிழ்ந்த அம்பிகை, ஆடி மாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையை படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்களை உரியவர்களுக்கு தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.

எனவே, சுமங்கலிகள் ஆடி அமாவாசை அன்று தேவியை ஆராதிக்க வேண்டும்.

அம்மே சரணம் !
முத்தாரம்மன் சத்சங்கம்