Feb 14, 2017

மஹா சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தி


விநாயகரை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் சங்கடங்கள் தீர்ந்து மகிழ்ச்சியைப் பெறலாம் எனக் கூறப்படுவதுண்டு."ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். நம் சங்கடங்களை நீக்கும் சதுர்த்தி தான் சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.

விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் நடனமாடும் போது அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.

அப்போது விநாயகர் சந்திரனிடம், "இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்" எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும்.
மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் உண்டாகும்.

சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரு‌ம்பகு‌தி குறையும் என்றும் நம்பப்படுகிறது.

சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கும் முறை;


ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் வரும் சங்கட ஹர சதுர்த்தியிலிருந்து விரதம் துவங்கி ஒவ்வொரு மாதமும் விரதமிருந்து பன்னிரண்டு சதுர்த்திகள் நிறைவுறும் தினத்தன்று, கணபதி ஹோமம் செய்து விரதத்தை நிறைவு செய்ய, எப்பேர்ப்பட்ட துன்பமும் விலகும் என்பது நம்பிக்கை.

அதிகாலையில் எழுந்து நீராடி, விநாயகப் பெருமான் திருவுருவப் படம் அல்லது விக்கிரகத்தின் முன் நெய் விளக்கேற்றி, விரதம் துவங்கச் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

கணபதி விக்ரஹம் இருந்தால், அவருக்கு புனித நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். மாப்பொடி, மஞ்சள், திரவியம், பால், தயிர், பஞ்சாம்ருதம், தேன், இளநீர், நெய், விபூதி, சந்தனம் ஆகிய திரவியங்களால் சிறப்பாக அபிஷேகம் செய்யலாம். கும்பம் ஆவாஹனம் செய்ய தெரிந்தவர்கள், கும்பாபிசேகம் செய்யலாம். படமாக இருந்தால், புஷ்பத்தால் பிரோக்ஷணம் செய்தால் போதும்.

பின்னர், ஸ்வாமிக்கு வஸ்திரம் சாற்றி, அலங்காரம் செய்து, சந்தனம், குங்குமம், புஷ்பம் சார்த்தவும்.

நைவேத்யமாக, கற்கண்டு, பழங்கள், அப்பம், மோதகம், வடை, எள்ளுடை, கரும்பு, பிட்டு, பேரீச்சம் பழம், தேன், பால், சுண்டல், கேசரி, அதிரசம், போலி, ரவாலட்டு, ஜாங்கிரி போன்று யாதாவது படைக்கவும்.

ஸ்ரீ கணேச மூல மந்திரத்தை 108 முறை ஜபித்தல் விசேஷம். அன்று முழுவதும் உபவாசம் இருந்து, மாலை சந்திரோதய சமயத்தில், மீண்டும் நீராடி, விநாயகரை மனதாரப் பூஜித்து, சந்திர பகவானையும் பூஜிக்க வேண்டும். அருகம்புல்லால் ஆனை முகனை அர்ச்சிப்பது நலம் பல தரும். நான்காம் பிறையை அறியாமல் பார்க்க நேர்ந்தால், சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் சமர்ப்பிக்க அந்த தோஷம் நீங்கும்.

இருபத்தோரு முறைகள் ஸ்ரீ கணேச‌ அதர்வசீர்ஷம் ஜபம் செய்வது மிகச் சிறந்தது. இயலாவிடில் தகுந்தவர்களைக் கொண்டு இந்த ஜபம் செய்விக்கலாம்.
மாலை நேரம், தெரிந்த கணபதி தமிழ் ஸ்துதிகள், கணேச பஞ்சரத்னம், சங்கஷ்டஹர ஸ்தோத்ரம், கணபதி அஷ்டகம், விநாயகர் அகவல், அஷ்டோத்ரம், திரிசதி அர்ச்சனை செய்து,  புஷ்பாஞ்சலி செய்யலாம்.

விநாயகருக்கு நிவேதனம் செய்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாகக் கொள்வது சிறப்பு. விநாயகருக்கு, 21 மோதகங்கள் நிவேதனம் செய்வது சிறந்தது. நாள் முழுவது உபவாசம் இருக்க இயலாவிடில், பால், பழங்கள் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

கோவிலுக்குச் சென்று விநாயகரை தரிசித்தல் சிறப்பு. பார்க்கவ புராணமாகிய விநாயக புராணம் படிப்பது அளவில்லாத நன்மை தரும்.
தொடர்ந்து ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் விநாய்கருக்கு சிறப்பு வழிபாடு செய்து விரதம் இருந்தால், நம் சங்கடங்களை எல்லாம் தீர்ப்பார் சங்கடஹர கணேசர்.

சங்கடங்களை நீக்கி அளவில்லாத நன்மைகளைத் தரும் சங்கட ஹர சதுர்த்தி விரதமிருந்து நலம் பெறுவோம்.

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam


2 comments: