Mar 19, 2017

ஸ்ரீ முத்தாரம்மன் கதை - 3 - ராஜ்யதாயிநீ ராஜபீடநிவேசித-நிஜாச்ரிதா

குலசேகரன்பட்டினம் என்னும் கடற்கரை நகரம் பாண்டிய மன்னர்களால் ஆட்சிச் செய்யப்பட்ட ஓர் அற்புத ஊர். இயற்கைத் துறைமுகமாக சிறப்புற்றிருந்த காலத்தில் இலங்கை சிங்கங்கபூர் பர்மா போன்ற அயல் நாடுகளோடும் மும்பை கொல்கொத்தா கள்ளிக்கோட்டை போன்ற பெருநகரங்களோடும் வாணிபத் தொடர்பில் கொண்டிருந்தது. நவதானியங்கள், தேங்காய், எண்ணெய், மரம் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டும் உப்பு, கருப்புக்கட்டி போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டும் செல்வச் செழிப்புடன் திகழ்ந்தது. பாண்டிய மன்னர்கள் அரபுநாடுகளிலிருந்து குதிரைகளை இத்துறைமுகம் வழியாக இறக்குமதி செய்தனர். 

மேலும் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழில்சிறப்புற்று விளங்கியது. தங்கநாணயங்கள் அச்சிடும் அக்க சாலைகள் இருந்ததற்குச் சான்றாக அக்கசாலை விநாயகர் திருக்கோயில்அமைந்துள்ளது எண்ணத்தக்கது.

இத்தகை சிறப்பு வாய்ந்த நகரில், குலசேகர பாண்டியன் என்னும் மன்னன் சிரூம் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தான். குலசேகர பாண்டிய மன்னன், சுற்றியுள்ள சிற்றரசர்களிடம் போரிட்டு வெற்றிபெற்று தம் ஆதிக்கத்தை பாண்டிய நாடு முழுவதும் பரப்பினார். இதன் விளைவாக கேரளா நாட்டை கைபற்ற எண்ணி திருவனந்தபுர மன்னனிடம் போர் தொடுத்தான். அந்த போரில், பாண்டிய மன்னவன் தோல்வியுற்றான். மனம் சோர்வுற்ற மன்னன் தன் குலதேவதையான பராசக்தியை தியானித்தப்படி தன் இருப்பிடம் நோக்கி புறப்பட்டான். வரும் வழியில் இரவு வெகு நேரமானதால் அப்படியே தூங்கிவிட்டான். பாண்டிய மன்னன் கனவில் அறம் வளர்த்த நாயகி தோன்றி, "பாண்டிய மன்னா தூங்கிவிடாதே, தூங்கி உன் நாட்டின் பெருமை இழந்து விடாதே ஒருமுறை தோற்றால் என்ன? மறுமுறை முயற்சி செய் என்று அருள்வாக்கு சொல்லி ஆசிர்வதித்து மறைந்தாள். மீண்டும் மன்னன் படையெடுத்து வெற்றி பெற்றான். இதனால் அறம் வளர்த்த நாயகிக்கு கோயில் கட்டி, கோவில் அருகே ஊர் அமைத்தான். மன்னனின் நினைவாக குலசேகர பட்டினம் என பெயர் பெற்றது அவ்வூர்.

அம்பிகை அரசை அளிப்பவள்; தன்னை அண்டியவர்களை அரசபீடத்தில் அமர்த்துபவள் என்பதை லலிதா சகஸ்ரநாமம்ராஜ்யதாயிநீ, ராஜபீடநிவேசித-நிஜாச்ரிதா என்னும் நாமங்களால் அழைக்கிறது. அம்பிகையை வழிப்பட்டால், நம்மை அரச பீடத்தில் அமர்த்துவாள். இங்கே அரச பீடம் என்பது பலதுறைகளின் தலைமைப் பதவியும், ஞான பீடங்களும் ஆகும். நாம் இருக்கும் இடத்தில் நம்மை தலைமை இடத்தில் வைப்பாள் என்பதே இந்த நாமங்களின் உட்கருத்து. அந்த நாமங்களை நினைவுப்படுத்துவதாகவே அமைகிறது இந்த வரலாறு.
சரி முத்தாரம்மன் இங்கே எப்படி வந்தாள்?

……………………….(அன்னை அருள் பொங்கும்)

(ஸ்ரீ முத்தாரம்பிகை மாஹாத்மியம் என்னும் தொடரில் இருந்து எடுக்கப்பட்டது)


Posted by Mutharamman Satsangam

No comments:

Post a Comment