Jul 22, 2017

பித்ரு தோஷம் நீக்கும் ஆடி அமாவாசை (23.07.2017)

Image may contain: text

சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. இதில் ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும்.


ஆடி அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது.
பெற்றோருக்கு திதி கொடுக்காதவர்கள், திதி கொடுப்பதே என்ன என்று தெரியாமல் இருப்பவர்கள், வாரிசு இல்லாதவர்கள், விபத்து, தற்கொலை, அகால மரணமடைந்தவர்கள்… இவர்களின் ஆத்மாக்களுக்கு சாந்தி ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் தோஷம் ஏற்படும். இவை காலம் காலமாக தொடர்வதால் பித்ரு தோஷம் ஏற்பட்டு கால சர்ப தோஷமாக மாறும்.



இது வம்சாவளியாக தொடர்வதால் வீட்டில் கஷ்டம், திருமணத்தடை, விபத்து, செய் தொழிலில் நஷ்டம், நிம்மதியின்மை என அடிக்கடி நிகழும். இதற்கு ஒரே வழி அதற்கான தோஷ நிவர்த்தி செய்வது தான்…



அமாவாசைதோறும் திதி கொடுக்க இயலாதவர்கள்கூட வருடத்தில் மூன்று அமாவாசைகளில் அவசியம் திதி கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. ஆடி, புரட்டாசி, தை ஆகிய மூன்று அமாவாசைகளில் கண்டிப்பாக நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும்.


ஆடி அமாவாசை முக்கியமானது. அன்றைய தினம் கடல், நதிகள் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்க்கு திதி கொடுப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.


அவரவர் குடும்ப வழக்கப்படி வீட்டில் படையல் இட்டு வழிபட்டு முன்னோர் நினைவாக இல்லாதோர், இயலாதோர், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம், உடை, போர்வை போன்றவற்றை வழங்குவது பல்வேறு பாவங்களை நீக்கி புண்ணிய பலன்களை சேர்க்கும்.

ஆடி அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது.


அன்றைய தினம் ஒரு கதையை படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சௌமாங்கல்யத்துடன் வாழ்வார்கள்.

விரதம் சரி ,அது என்ன கதை எதற்காக அதை சொல்ல வேண்டும்?

அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதை தீர்த்துக்கொள்ள அவன் தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்த போது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன் இளமைப்பருவத்தை எட்டும் போது இறந்து போவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான்.

மன அமைதிவேண்டி அவன் பல கோவில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளி கோவில் ஒன்றில் அவன் வழிபட்ட போது உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை.

அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது. இளமை பருவம் வந்தால் இளவரசன் ஒருநாள் இறந்து போனான்.

மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்து போன இளவரசனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளை காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்த பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள்.

விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள்... தனக்கு தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள்.

இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர் பெற்று எழச்செய்தாள். இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடி மாத அமாவாசை நாளாகும்.

தனக்கு அருளிய தேவியிடம் அந்த பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெற செய்தது போலவே இந்த நாளில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள்.

மகிழ்ந்த அம்பிகை, ஆடி மாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையை படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்களை உரியவர்களுக்கு தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.

எனவே, சுமங்கலிகள் ஆடி அமாவாசை அன்று தேவியை ஆராதிக்க வேண்டும்.

அம்மே சரணம் !
முத்தாரம்மன் சத்சங்கம்

No comments:

Post a Comment